வெலிக்கடை பொலிஸில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பொலிஸாரின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரின் வீட்டில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸார் அந்த வீட்டின் பணிப்பெண்ணை கைது செய்தனர்.
அப்போது அந்த பெண் வேறு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பின்னர் சந்தேகநபரிடம் விசாரணை நடத்திய போது ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு அந்த பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும், அவர் பதுளை தெமோதர பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தாக்குதலால் தனது மனைவி உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.