அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது பணியிடத்தில் 250,000 டொலலர்கள் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நவிஷ்ட டி சில்வா என்ற 36 வயதுடைய நபருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வீஸ் நிறுவனத்தில் திருடப்பட்ட பணம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்து அவர்களது விளையாட்டுக் கழகத்தில் விளையாடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தனது விளையாட்டுக் கழகத்தில் சேர்த்துக் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரங்களில் இலங்கையின் திலகரத்ன டில்ஷான், லஹிரு திரிமான்ன, மேற்கிந்திய தீவுகளின் சூப்பர் ஸ்டார் கிறிஸ் கெயில் மற்றும் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் அடங்குவதாக ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நபரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து வீரர்கள் அறிந்திருக்கவில்லை என்ற உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளன.
டில்ஷானுக்குச் சொந்தமான விளையாட்டு நிறுவனம் ஒன்றின் கணக்கில் 37,250 டொலர்களும், இலங்கை வீரர் லஹிரு திரிமான்னவின் கணக்கில் 5,800 டொலர்களும், பெயர் குறிப்பிடப்படாத ஏனைய வீரர்களுக்கு 28,950 டொலர்களும் செலுத்தியுள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நவிஷ்ட டி சில்வாவுக்கு இறுதியில் தண்டனை வழங்கப்படவுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.