Site icon Tamil News

மண்வெட்டியால் தாக்கியதில் விவசாயி பரிதாபமான உயிரிழப்பு

நீர் பிரச்சினை காரணமாக ஹபரணை, செவனகம பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் விவசாயி ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

ஹபரணை, ஹபரனகம பிரதேசத்தில் வசித்து வந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுனில் பிரேமசிறி என்பவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இக்கொலையை செய்தவர் ஹபரனாகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருபவர் எனவும் வாக்குவாதம் முற்றி மண்வெட்டியால் தாக்கியதில் விவசாயி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெற்செய்கையில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மண்வெட்டியால் தலையில் அடிபட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஹபரணை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணைகளுக்காக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இக்கொலை தொடர்பான நீதவான் விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Exit mobile version