கூகுள் மேப்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ள 60 ஜப்பானிய மருத்துவர்கள் !
கூகுள் மேப்ஸில் தவறான மதிப்புரைகளை நீக்கக் கோரும் தங்கள் கோரிக்கைகள் மீது அக்கறை காட்டாமல் புறக்கணித்ததாக, ஜப்பானில் 60 மருத்துவர்கள் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
கூகுள் மேப்ஸில் வாடிக்கையாளர்கள் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. இந்நிலையில் ஜப்பானில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் தொடர்பாக வாடிக்கையாளர்கள் தவறான மதிப்பீடுகளையும் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் தங்கள் வணிகம் பாதிப்பை சந்திப்பதாகவும் கூகுள் நிறுவனத்திடம் மருத்துவர்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், அந்நிறுவனம் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டாமல் இருந்ததால், 60 மருத்துவர்கள் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
நோயாளியின் ரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டிய கடமையின் காரணமாக இதுபோன்ற நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்கவோ அல்லது அவற்றை மறுக்கவோ இயலாத நிலையில் உள்ளதாக அம்மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அந்த மருத்துவர்கள் கூகுள் நிறுவனம் மீது டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்குத் தொடுத்தனர்.
அந்த வழக்கில், ‘கூகுள் மேப்ஸ் ஜப்பானில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. எனவே, நியாயமற்ற மதிப்புரைகள் கவனிக்கப்படாமல் விடப்பட்டால், மருத்துவ வணிகங்களுக்கான குறைபாடுகளை கூகுளில் எளிதில் அடையாளம் காண முடியும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மதிப்புரைகள் விவகாரத்தில், கூகுள் நிறுவனத்தின் செயலற்ற தன்மைக்கு 1.4 மில்லியன் யென் (9,000 டொலர்) இழப்பீடு வழங்க வேண்டும் என இந்த மருத்துவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குத் தொடுத்துள்ள மருத்துவர்களில் ஒருவர் கூறுகையில், “ஆன்லைனில் கருத்துகளை பதிவிடுபவர்கள் கட்டுப்பாடுகளின்றி அவதூறு, இழிவுபடுத்துவது என எதையும் பதிவிடுகின்றனர்” என்றார்.
இதுதொடர்பாக மருத்துவர்களின் வழக்கறிஞர் யுச்சி நகாசாவா, ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “மதிப்புரைகளை ஆன்லைனில் பதிவிடுவது எளிதாக உள்ளது.ஆனால், அவை தவறானது என கண்டறிந்து நீக்க வைப்பது என்பது மிகவும் கடினமானது. மோசமான விமர்சனங்களைப் பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்துடனேயே மருத்துவர்கள் தங்கள் வேலையைச் செய்ய இது வழிவகுக்கும்.” என தெரிவித்துள்ளார்.