Site icon Tamil News

ஈரானின் தீ மிதி திருவிழா; 11 பேர் பலி ஆயிரக்கணக்கானோர் காயம்!

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. ஃபார்சி மொழியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ மிதி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவானது மார்ச் மாதம் 20ம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20ம் திகதியில் இருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இதுவரை 3,550 பேர்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவிழாவின் போது, பங்கேற்பாளர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், தீய சக்திகளை விரட்டவும் நெருப்பில் குதிக்கின்றனர்.

அப்போது, எனது மஞ்சள் நிறத்தை அளித்து, சிவப்பை பெறுகிறேன் என முழக்கமிடுவார்கள். மஞ்சள் நிறம் நோய் எனவும் சிவப்பு புதிய பிறப்பின் அறிகுறி எனவும் ஈரானிய மக்களால் நம்பப்படுகிறது.

இந்த தீ மிதி திருவிழாவானது ஈரானின் இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ஷியா பிரிவு மதகுருக்களால் பொதுவாக புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இருப்பினும் இளையோர்களிடத்தில் இந்த விழாவிற்கு பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version