Site icon Tamil News

இலங்கை பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளால் ஆபத்து

இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, விதி மீறல்கள் இடம்பெறவுள்ளது.

அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை தெரியவந்துள்ளது.

கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும் அமைதிக்கான மையத்தின் குழுவொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வௌியாகியுள்ளது.

இந்த ஆய்விற்கமைய, 2022 ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க காலாவதியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2000 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2019 வரையான காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்ட 40,000 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் காலாவதியானவை என்பதுடன், 2022 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி வரை 8 ,265 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

துப்பாக்கிகளுக்கு அருகில் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தக்கூடாது என கண்ணீர்ப்புகை குண்டு தயாரிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ள போதிலும், 2022 ஆம் ஆண்டில் துப்பாக்கிக்கு அருகிலேயே அதிகளவான கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி காணப்பட்ட 2022 மார்ச் 31 முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸார் 84 சந்தர்ப்பங்களில் 6 ,722 கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளதுடன், அதன் பெறுமதி 26 மில்லியன் ரூபாவாகும்.

ஒரே நாளில் அதிக அளவான கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பம் 2022 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்ததுடன், அந்நாளில் 100 கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

Exit mobile version