அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்த நாடு தொடர்பில் ஸ்வீடன் வெளியிட்ட தகவல்

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அணு ஆயுத உற்பத்தியில் பலம் வாய்ந்த நாடு எது என்ற விபரங்களை, ஸ்டாக்ஹோமை சேர்ந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் — ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து, உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அணு ஆயுத மோதல் தொடர்பான அச்சுறுத்தல் பேசுபொருளாகி உள்ளது. இந்த நேரத்தில், இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அணு ஆயுத பலம் கொண்டுள்ள நாடு வலிமையான நாடாக கருதப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் தலைநகரமான ஸ்டாக்ஹோம் நகரத்தில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
‘சிப்ரி’ எனப்படும், இந்த நிறுவனம், 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளைக் கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிடும் புத்தகம் உலகின் அணு ஆயுத சமநிலையில் நம்பகமான மதிப்பீடாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு, அணு ஆயுத பலத்தில் யார் சிறந்து விளங்குவது என்பது தொடர்பான புத்தகம், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலகின் முன்னணி அணுசக்தி நாடாக ரஷ்யா உள்ளது. அந்நாட்டிடம், 5,880 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் பல ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, 2,100 ஏவுகணைகள் உயர் செயல்பாட்டு எச்சரிக்கையில் வைக்கப்பட்டு, ஏவ தயாராகவும் உள்ளன.
அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கைகள் இருந்தபோதிலும், ரஷ்யா தன் அணு ஆயுதக் களஞ்சியத்தை தொடர்ந்து நவீனமயமாக்கி வருகிறது. இது அமைப்புகளை மேம்படுத்துவதையும் அதன் தாக்கும் திறனை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொத்தம், 5,244 அணு ஆயுதங்களை அமெரிக்கா வைத்துள்ளது. அவற்றை நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நில அடிப்படையிலான ஏவுகணைகளில் பயன்படுத்த முடியும்.
ரஷ்யாவைப் போலவே, இவற்றில் கணிசமான எண்ணிக்கையானது சில நிமிடங்களில் ஏவப்படும் திறன் கொண்டது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் அணுசக்தி அமைப்பாக, சீனா உள்ளது.
இந்தாண்டு துவக்கத்திலேயே சீனாவின் அணு ஆயுத களஞ்சியம், 600ஐ தாண்டியது. மூன்று பெரிய பாலைவனப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணைகளை சீனா உருவாக்கியுள்ளது.
அமைதி காலத்தில், சீனா பல ஏவுகணைகளை போர்முனையில் தயார்நிலையில் வைத்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு போட்டியாக, வரும் 2035ம் ஆண்டுக்குள், 1,500 போர்முனைகளில் ஏவுகணைகளை சீனா தயார்நிலையில் வைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் பாகிஸ்தானை விட இந்தியா கூடுதல் அணு ஆயுத பலத்தை பெற்றுள்ளதாகவும், ஏவுகணை தொழில்நுட்பத்தில் முன்னேறியுள்ளதாகவும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆயுத அறிக்கை தெரிவித்துள்ளது.