Site icon Tamil News

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு

பசுமைப்புரட்சியில் இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் தூய சக்திவலு மாநாடு – 2023 இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்துவரும் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவுமே பசுமைப்புரட்சிக்குத் தலைமைதாங்குவதாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பசுமைப்பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறையில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அழைப்புவிடுத்ததைத்தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து நான் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றேன்.

அதேபோன்று யுத்தத்தின் விளைவாகப் பலவருடகாலத் துன்பத்துக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் இலங்கை முகங்கொடுத்திருந்தமையினை நான் நன்கு அறிவேன்.

இருப்பினும் இந்நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுவதற்கான இயலுமையையே இலங்கை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள் என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது உரையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியில் இலங்கை மிகச்சிறப்பான இயலுமையைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், காற்றாலை மற்றும் சோலார் முறைகளிலான சக்திவலு உற்பத்தியின் மூலம் பசுமை உற்பத்தியை நோக்கி நகரமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று சீனாவும் இந்தியாவும் இம்முறைகளிலான உற்பத்தியில் ஏன் ஈடுபடுகின்றது? ஏனெனில் அது சூழலுக்கும், மக்களின் சுகாதாரநலனுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் சிறந்ததாகும்.

அவர்களால் சந்தைகளைக் கைப்பற்றமுடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். எனவே சீனாவுடன் சிறந்த நல்லுறவைப் பேணுகின்ற, அதேவேளை இந்தியாவுடனும் மிகநெருக்கமாக இருக்கின்ற இலங்கைக்கு இதில் பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன எனவும் நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version