Site icon Tamil News

கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

புத்தளம் – கற்பிட்டி,  சிலாபம், நீர்கொழும்பு   ஆகிய இடங்களுக்கான விஜயத்தினை இன்று  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரில் ஆராய்ந்ததுடன்  நியாயமான தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுயளித்தார்.

கற்பிட்டி, கந்தக்குளி சென். அந்தனி கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதே கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருக்கின்ற கற்பிட்டி, கந்தக்குளி முகத்துவார பகுதியை பார்வையிட்டதுடன் அங்கு கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைக்கு இடையூறாக இருக்கும் முகத்துவாரப் பகுதியை தூர்வாருவதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளைக்  கேட்டுக் கொண்டார்.

கந்தக்குளி முகத்துவாரம் தூர்வாரப்படுவதன் மூலம் அந்தப்  பிரதேசத்தில் கடற்றொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட சுமார் 200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து, சிலாபம் மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்குள்ள மீன் விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன் வியாபாரிகள் மற்றும் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர், நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தெப்பத்தின் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளுகின்ற சிறுதொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக,  நீர்கொழும்பு பிரதேசத்தில் சுமார் 110 தெப்பம் தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், பாரம்பரியமாக தாங்கள் தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 2 கிலோமீற்றர் கடல்பரப்பை தமக்கான மீன் பிடிப் பிரதேசமாக வரையறை செய்து தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் தமது பாரம்பரிய தொழில்  பிரதேசத்தினுள் இயந்திரப் படகுகள் மூலம் தொழில் செய்பவர்கள் உட்பட ஏனையோர் தொழிலை மேற்கொள்வதால் வாழ்வாதாரத்தை இழப்பதாகவும் முறையிட்டனர்.

குறித்த விடயம் உட்பட தெப்பம் தொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படுமென இதன்போது கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார்.

Exit mobile version