Site icon Tamil News

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கடிதம் நேற்றிரவு (திங்கட்கிழமை) கிடைத்ததையடுத்து நானும் மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டுக்கடிதம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்திற்கு அனுமதியளிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, செயற்திறன்மிக்க கொள்கைசார் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளடங்கலாக அனைத்து முக்கிய வழங்குனர்களினதும் நிதியியல் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதிலும் இலங்கை அரசாங்கத்தினால் அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

இந்தியா, பாரிஸ் கிளப் மற்றும் சீனா ஆகிய நாடுகளால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றோம் என்று அதில் தெரிவித்துள்ள அமைச்சர் அலி சப்ரி, நீண்டகாலமாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதும், தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதுமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் பொருளாதார மீட்சிக்கு வழிகாட்டக்கூடும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை அந்த மறுசீரமைப்புக்கள் எப்போதும் வலி நிறைந்தவையாக காணப்படும் என்றும், வலி இன்றி அடைவு இல்லை என்றும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version