பூமியை விட்டு விலகிச் செல்லும் சந்திரன் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

சந்திரன் ஆண்டுக்கு 1.5 அங்குலம் வீதம் பூமியிலிருந்து விலகிச் செல்கிறது. இதனால் நாட்கள் 25 மணிநேரம் நீடிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஸ்டீபன் டைகெர்பி, சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் நமது கிரகத்திலிருந்து 1.5 அங்குலம் (3.8 செ.மீ) மேலும் விலகிச் செல்கிறது எனக் கூறியுள்ளார்.
இதன் விளைவாக, பூமியின் சுழற்சியும் குறைந்து வருவதாக அவர் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு தொடரும்போது நாட்கள் நீளமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரன் தொடர்ந்து விலகிச் செல்லும்போது, ஒரு நாளில் வினாடிகள், நிமிடங்கள் மற்றும் இறுதியில் மணிநேரங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கும் – ஆனால் இன்று உயிருடன் இருக்கும் நம்மில் யாரும் அதைக் கவனிக்க வாய்ப்பில்லை என அவர் கூறுகிறார்.
‘239,000 மைல்கள் (384,000 கிமீ) தூரத்துடன் ஒப்பிடும்போது வருடத்திற்கு 1.5 அங்குலங்கள் என்பது வருடத்திற்கு 0.00000001 சதவீதம் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், கிரகணங்கள், அலைகள் மற்றும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு 24 மணிநேரம் நீடிக்கும் நாட்களை நாம் தொடர்ந்து கொண்டிருப்போம் என்றும் விளக்கமளித்துள்ளார்.