ரஷ்யாவை உலுக்கிய உக்ரைனின் தாக்குதல் – படைகளைப் பாராட்டிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுக்குள் நடத்தப்பட்ட அண்மைத் தாக்குதல்களை உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாராட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய விமான படைத்தளங்கள் குறிவைக்கப்பட்டன.
துருக்கியில் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் அமைதி உடன்பாட்டுக்கான பேச்சு தொடரவிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
சுமார் 120 ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ‘Spider’s Web’ என்ற அழைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் தாக்கப்பட்டதாய்க் கூறப்பட்டது.
சுமார் 7 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக உக்ரைனியப் பாதுகாப்புச் சேவை கூறியது.
இந்தத் தாக்குதலுக்குத் தயாராகச் சுமார் ஒன்றரை ஆண்டாகியதாகக் கூறிய உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பாதுகாப்புச் சேவைப் பிரிவுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதற்கிடையில் உக்ரைனின் செயலைப் பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
சில விமானங்களில் தீப்பற்றிக்கொண்டதாய் ரஷ்யா கூறியது. சந்தேக நபர்கள் சிலரைத் தடுத்துவைத்திருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.