சீன ஜனாதிபதியுடன் பேசிய டிரம்ப் : மீண்டும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுமா?

அமெரிக்கா மற்றும் சீனா இடையே மீண்டும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மந்திரிசபையின் பிரதிநிதிகள் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன மந்திரிசபை பிரதிநிதிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் வருகிற 9ஆம் திகதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.