Site icon Tamil News

ராகிங் சம்பவத்தில் சாட்டையடி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் 70 சதவீத மாணவர்கள் படித்து வருகின்றனர்.
சமூக நலத்துறை சாா்பில் மாணவிகள் மட்டும் தங்குவதற்கு ஒரு விடுதியும், மாணவா்கள் தங்குவதற்கு 2 விடுதிகள் என மொத்தம் 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பைங்கினர் அண்ணா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் விடுதியில் சுமார் 70 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது இந்த விடுதியில் முதலாம் ஆண்டில் 19 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் ஒரு மாணவரும், மூன்றாம் ஆண்டில் 8 மாணவர்களும் என்று மொத்தம் 28 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் உள்ள 3-ம் ஆண்டு படிக்கும் சீனியர் மாணவர்கள், செய்ய சொன்ன பணியை, முதலாம் ஆண்டு படித்து வரும் ஜூனியர் மாணவர்கள் செய்யவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மூன்றாமாண்டு மாணவா்கள், முதலாமாண்டு மாணவா்களுக்கு சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராகிங் செய்தனராம். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியது.

இது குறித்த தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கலைவாணி, நேற்று ராகிங் சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாம் ஆண்டு பயிலும் 8 மாணவர்களை வரவழைத்து கல்லூரி துறை பேராசிரியர்கள் மூலம் விசாரணை நடத்தினார். மேலும், ராகிங் தகவலை மாணவா்களின் பெற்றோருக்கு தெரிவித்த நிலையில், கல்லூரிக்கு அவா்களை அழைத்து வர மாணவா்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், செய்யாறு போலீஸாா் நேற்று மாலை சம்பவம் தொடா்பாக விடுதிக்குச் சென்று, அதன் காப்பாளரான வேட்டவலத்தைச் சோந்த ரவி மற்றும் விடுதியில் தங்கியுள்ள ஒவ்வொரு மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version