Site icon Tamil News

தத்துசேன மன்னரின் கிரீடத்தை தேடியவர்கள் கைது

தத்துசேன மன்னனுக்கு சொந்தமானது என கூறப்படும் கிரீடத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவரை, சேருநுவர வனப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சேருநுவர பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீரிகம, அலபத்த, புலத்சிங்கள, கம்பஹா, கொட்டுகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் விசாரணையின் போது, ​​இந்தக் குழுவில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க சூனியக்காரியும் இருப்பதாகவும், பழங்கால புஸ்கோல புத்தகத்தில் உள்ள விவரத்தின்படி கிரீடத்தைத் தேடி காட்டிற்கு வந்ததாகவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version