Site icon Tamil News

முல்லைத்தீவில் தீயணைப்பு வாகனம் இல்லாதது பெரும் குறையாக மாறியுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக உள்ளது என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் நவநீதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (16.01)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடம் ஊடகங்கள் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்திருந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினை அணைக்க முடியாமல் யாழ்ப்பாணத்திலிருந்து வாகனத்தினை கொண்டுவந்து தான் தீயினை அணைப்பதற்கு பயன்படுத்தினோம்.

அன்றையதினமே ஊடகங்களூடாக செய்தியினை வெளிக்கொண்டுவந்திருந்தோம். புதுக்குடியிருப்பில் 5 கடைகள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகி இருக்கின்றன. அதேபோல் குமுழமுனை, முள்ளியவளை போன்ற பிரதேசங்களிலும் கடைகள் எரிந்திருக்கின்றன.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாதத்தில் ஒவ்வொரு கடைகளாவது தீவிபத்து சம்பவம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு வாகனம் இல்லாததே ஒரு குறையாக தான் உள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதாக இருந்தால் குறைந்தது ஒன்றரை மணித்தியாலயமாவது தேவைப்படும். தீ எரிந்து அணைந்த பின்னரே இங்கே வருகை தருவார்கள். ஆகவே அதிகாரிகள் எங்களுடைய துயர சம்பவத்தை கருத்திலெடுத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு தீயணைப்பு வாகனத்தினையும் அதற்குரிய பணியாளர்களையும் தந்துதவுமாறு மிக பணிவாக கேட்டுக் கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version