Tamil News

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கான வழக்கு அடுத்த வருடம்

குருந்தூர்மலைக்கு 14.07.2023 அன்றையதினம் பொங்கல் மேற்கொள்ள சென்ற போது பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலராலும் , பொலிஸாராலும் , பௌத்த பிக்குகளாலும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

அன்றையதினமே சட்டத்தரணிகளின் ஆலோசனைபடி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் இ.ஜெகதீசன், ஊடகவியலாளர் வி.சரவணன் ஆகியோரால் பொங்கலை குழப்பியமை, அநாகரிகமாக நடந்து கொண்ட விதம், தாக்கப்பட்டமை போன்ற விடயங்களை உள்ளடக்கிய முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்திருந்தனர்.

அதற்குரிய நடவடிக்கைகளை இரண்டு மாதங்களாகியும் பொலிஸார் எடுக்கவில்லை. இருப்பினும் பொங்கல் செய்வதற்குரிய அனுமதியை நீதமன்றத்தினூடாக பெற்று ஒருமாதத்தின் பின்னர் 18.08.2023 அன்று பொங்கலினை மேற்கொண்டிருந்தார்கள்.

முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கபடாமையை தெரிவித்து வந்தமையால் அதற்கு பொலிஸார் நேற்று நீதிமன்றிற்கு சென்று ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதில் வழக்காளியாக முறைப்பாட்டாளர்களையும், முறைப்பாடு செய்யப்பட்டமைக்கமைய பிக்குமார், பொலிஸார் முறைப்பாடு செய்யப்பட்டு B.1375/2023 என்ற வழக்கு இலக்கம் வழங்கப்பட்டு 23.02.2024 அன்றைய தினத்திற்கு தவணையிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

Exit mobile version