Site icon Tamil News

பெண் போலீசாருக்கு ஆபாச குறுஞ்செய்தி இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

சென்னையை அடுத்த துரைபாக்கம் கண்ணகிநகர் குற்றபிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 8 பெண் போலீசார் தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து பணி மாறுதல் பெற்று கண்ணகிநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து கண்ணகி நகர் பெண் போலீசார் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் ஒரு புகார் கடிதம் அளித்தனர்.

அதில் கண்ணகி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துசாமி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும் பெண்போலீசாரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், படங்கள், அனுப்பி தொடர்ந்து சித்தரவதை செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் தங்களை பழிவாங்கும் நோக்கில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தியதாகவும் அதன் பின்னரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த புகாரை விசாரணை செய்யும் படி உயர் அதிகாரிகளுக்கு அமல் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில் உயர் அதிகாரிகள் பெண் போலீசாரின் புகார் குறித்து விசாரணை செய்தனர் .

பின்னர் இது குறித்த விசாரணை அறிக்கையை போலீஸ் கமிஷ்னர் அமல் ராஜிடம் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதே சமயம் கண்ணகிநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 8 பெண் போலீசாரும் விடுவிக்கப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version