Tamil News

‘கோட்’ அதிகார பூர்வ வசூலை வெளியிட்ட படக்குழு

தளபதி விஜய், முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள “கோட்” திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இந்த படத்தின் வசூல் குறித்து, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன் படி நான்கு நாட்களில் தளபதியின் ‘கோட்’ திரைப்படம், உலக முழுவதும் ரூபாய்.288 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார். 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் அதிகம் என்றாலும், ‘லியோ’ படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறி வருவதையும் பார்க்க முடிகிறது.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தளபதியை ஒரு கேங் லீடராகவும், தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு சாமானிய மனிதனாகவும் பார்க்க வைத்தது. இந்த படத்தில் தளபதி டபுள் ஆக்ஷனா? என பலர் கேட்க்கும் அளவுக்கு விஜய் கிளைமேக்ஸ் காட்சியில் பர்ஃபாம்மேன்ஸில் ஸ்கோர் செய்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், 4 நாட்களில் இந்த படத்தின் முழு பட்ஜெட்டை தாண்டி வசூலை அள்ளியது. அதாவது இப்படம் ரூபாய்.250 கோடி முதல் ரூபாய். 300 கோடி வரை பட்ஜட்டில் எடுக்கப்பட்டு… நான்கு நாட்களில் ரூபாய்.350 கோடி வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ‘கோட்’ திரைப்படம் ரூபாய்.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 4 நாட்கள் ஆகியும் ரூபாய்.300 கோடி வசூலை கூட எட்ட முடியாமல் திணறி வருகிறது. ‘கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் ரூபாய்.126 கோடி வசூல் செய்தது. பின்னர் இரண்டாவது நாள் வெள்ளி கிழமை என்பதால், வசூலில் டல் அடிக்க துவங்கியது.

ஆனால் சனி மற்றும் ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வந்ததால்… ரூபாய்.250 கோடி வசூலை தாண்டியுள்ள தளபதியின் ‘கோட்’ எப்படியும் நாளை ரூபாய்.300 கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version