Site icon Tamil News

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஐந்து ரூபாய் டாக்டர் பெயர் சூட்ட வேண்டும்

வடசென்னையில் ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்டவலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெய்ஹரி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நுாற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் ஏராளமான குழந்தைகளும் அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரனின் முகக்கவசத்துடன் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் ஜெய்ஹரி, தங்கசாலையோடு முடிய இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தை திருவொற்றியூர் விம்கோ வரை கொண்டு வர கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இளைஞர்கள் பெண்களை திரட்டி மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியவர் டாக்டர் ஜெயச்சந்திரன், அவரது நினைவை போற்றும் வகையில், வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயச்சந்திரனின் பெயரை சூட்ட வேண்டும்.

வடசென்னையில் ஜெயச்சந்திரனின் சிலையை நிறுவ வேணடும். திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நடிகர் கே.ராஜன் பேசுகையில் ,டாக்டர் ஜெயச்சந்திரன் என்னை விட வயது குறைந்தவர்.

ஆனால் வடசென்னை முழுக்க அவர் சொந்தமாகி விட்டார்.

அவர் மெட்ரோ ரயில் திட்டம் வடசென்னைக்கு கொண்டு வர கிட்டதட்ட 1 லட்சம் பேரை திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்.

அதன் விளைவாக வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ வரை மெட்ரோ ரயில் வந்து கொண்டிருக்கிறது.

நெரிசலில்லாமல் மக்கள் குளிர் சாதன வசதியோடு மெட்ரோ ரயிலில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

தண்டையார்பேட்டையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழக முதல்வரை நான் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

ஜெயச்சந்திரன் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சூட்டுவார் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் மு.சம்பத், சி.பி.ராமஜெயம், பாபு சுந்தரம் ஆகியோரும், அகில இந்திய கட்டிடத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுசெயலாளர் மு.பன்னீர்செல்வம், அனைத்து இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி, இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.டி.தயாளன், வடசென்னை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜி.ராபர்ட், திருவொற்றியூர் செல்வி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராஜகுமார்,யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை இயக்குனர் யாயா கார்த்திக், தங்கபெருமாள், ராயபுரம் ரவுண்டப் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் மு.ராமச்சந்திரன், தாயன்பு அறக்கட்டளை மதன், தெலுங்கு செட்டியார் சங்கம், இந்திய நாடார் பேரவை மாவட்ட நிர்வாகி எட்வர்ட் ராஜா, நாடார் மகாஜன சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான விஜயாசந்திரன், வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி மம்மி டாடி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வன்னியர் சங்கத்தின் மகளிர் பிரிவு செயலாளர் ராஜகாந்தி நன்றி கூறினார்.

முன்னதாக போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் நேதாஜி சமூக நல அறக்கட்டளையின் பொதுசெயலாளர் வன்னியராஜன் வரவேற்றார்.

இந்த போராட்டம் குறித்து தமிழக காங்கிரஸ் பொதுசெயலாளரும் கருப்பு அம்புகள் விளையாட்டு அமைப்பின் நிறுவனருமான கவிஞர் ராமலி்ங்க ஜோதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

Exit mobile version