Tamil News

கோவையில் 3 நாட்களாக சேர்ப்பாரற்று நின்ற கார்… திறந்து பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக சேர்ப்பாரற்று கார் ஒன்று நின்றது. இதைப் பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த காரை பார்வையிட்டனர். பொலிஸாரின் விசாரணையில் அந்த காரானது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.‌

அந்த காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டவல் மற்றும் போர்வை இருந்ததும், ரத்தக்கரை காரில் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் பாலமுருகனின் மனைவி தீபா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும், கடந்த 17ம் திகதி அவர் திடீரென காணாமல் போனதும் தெரியவந்தது.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.‌ இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட பொலிஸார் தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் கள்ளக்காதல் ஏற்பட்டு காரில் கோவை வந்தார்களா? அவ்வாறு அவர்கள் காரில் வந்து இருந்தால் காரை உக்கடம் மார்க்கெட் பின்புறம் நிறுத்திவிட்டு எங்கே போனார்கள்? என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பெரம்பலூர் மாவட்ட பொலிஸாரும் கோவை வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை உக்கடத்தில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரால் இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version