Tamil News

சென்னை -ரயில் நிலையத்தில் வைத்து மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்…!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டி விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (20) என்பவர் சென்னையில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இதே கல்லூரியில் பயிலும் 2-ம் ஆண்டு சீனியர்களுடன் சத்தியமூர்த்திக்கு கடந்த சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சொந்த ஊர் செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி இன்று வந்திருந்தார். அப்போது அவரைச் சுற்றி வளைத்த 8 பேர் கொண்ட கும்பல், கத்தியால் சரமாரியாக சத்தியமூர்த்தியை வெட்டியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் அங்கு ஈடுபட்டிருந்த ரயில்வே பொலிஸார், அக்கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

வெட்டப்பட்ட மாணவர் சத்தியமூர்த்தி

இதையடுத்து காயமடைந்த சத்தியமூர்த்தியை,ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து ரூட்டு தல விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த ரயில் நிலையத்தில், மாணவர் ஒருவர் கத்தியால் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version