Site icon Tamil News

கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே இதனை தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி  5 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை –  காங்கேசன்துறைக்கு இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.

எனினும், வவுனியா முதல் காங்கேசன்துறை வரையிலான யாழ். ராணி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 27 ஆம் திகதி முதல் அது ஓமந்தை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் அநுராதபுரம் முதல் காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை ஜூலை மாதமளவில் முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

எனினும், அநுராதபுரத்தில் இருந்து மஹவ சந்தி வரையிலான ரயில் மார்க்கத்தில் மற்றுமொரு திருத்தப்பணி ஜூலை மாதம் தொடக்கம் டிசம்பர் மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதால், ஜனவரி மாதத்திலேயே கொழும்பு கோட்டை –  காங்கேசன்துறை  நேரடி ரயில் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் சுட்டிக்காட்டினார்.

 

Exit mobile version