Tamil News

தன்னை கருணைக் கொலை செய்யுமாறு பொலிஸாரிடம் கதறிய மூதாட்டி..!- கரூரில் பெரும் பரபரப்பு

அரசாங்கமே தன்னைக் கருணை கொலை செய்து தனக்குச் சொந்தமான இடத்தில் புதைக்க வேண்டும் என்று காவல் துறையிடம் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள். இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அவரது கணவர் இறந்து விட்டார். இதனால் 2 மகன்கள் மற்றும் 1 மகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி தங்கம்மாள் திருமணம் செய்து வைத்தார். அவர்கள் தற்போது தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு இவரது மகள் தனலட்சுமி, பேரன் நடராஜ் என்பவரின் மேல்படிப்பிற்காக மூதாட்டி வசிக்கும் வீடு மற்றும் கடைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுவதாக கூறி கையெழுத்து பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளில் அடமானத்தை மீட்டு பத்திரத்தை தருவதாக கூறி, வீட்டை தங்கள் பெயருக்கு செட்டில்மென்ட் செய்து கொண்டுள்ளனர்.இது தொடர்பாக அந்த மூதாட்டிக்குத் தெரியாமல் இருந்த நிலையில் கடந்த 22.4.2023 அன்று அவரது வீட்டிற்கு வந்த பேரன் நடராஜன் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். மூதாட்டி தர மறுத்ததால் கோபத்துடன் வெளியேறிய பேரன் நடராஜன், குடிபோதையில் மூதாட்டியை கெட்ட வார்த்தையால் திட்டியதுடன், நானும், என் அம்மாவும் உன்னை ஏமாற்றி என் அம்மா தனலட்சுமி பெயருக்கு வீட்டை செட்டில்மென்ட் எழுதி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தங்கம்மாள்

மேலும், இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது என்றும், வீட்டைக் காலி செய்யாவிட்டால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டிச் சென்றுள்ளார். இதனால் பயந்துபோன மூதாட்டி, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ” படிப்பறிவு இல்லாத மூத்த குடிமகளான எனது சொத்தை என் மகள் தனலட்சுமி, அவரது மகன் நடராஜன் ஆகிய இருவரும் மோசடியாக ஏமாற்றி செட்டில்மென்ட் பெற்றுக் கொண்டதுடன் எனது வீட்டிலிருந்து வெளியேற்ற கெட்டவார்த்தையால் திட்டி அடித்து கொலை முயற்சி செய்கிறார்கள்.

அவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறக்காமல், வலியில்லாமல் என்னை அரசு கருணைக் கொலை செய்து என் சொத்தில் உடலை புதைக்க வேண்டும். அத்துடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மூதாட்டியின் இந்த மனு கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version