Site icon Tamil News

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதில் மிச்செல் ஒபாமாவை களமிறக்கவுள்ள கட்சி!

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் பைடனும்,  ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர்.

முதலில் பேசத் தொடங்கிய ட்ரம்ப், ’’ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரத்தில் பைடன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது வரலாற்றில் அவமானகரமான நாள்’’ என விமர்சித்தார்.

ட்ரம்ப் எழுப்பிய கேள்விகளுக்கு அதிபர் ஜோ பைடன் நிதானமாக பதில் அளித்தார். ட்ரம்பின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடியதாகவும், தற்காலிக பொருளாதார பேரழிவை அமெரிக்கா சந்தித்ததாகவும் பைடன் குற்றஞ்சாட்டினார். மேலும் கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தது மோசமான செயல் என்றும் விமர்சித்தார். ட்ரம்பின் தவறான குடியேற்றக் கொள்கைகளால் தாயிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டதாகவும் அவர் சாடினார்.

எனினும் ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் சற்று நேரம் தடுமாறினார். விவாதத்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை, அவருக்குப் பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பைடனுக்குப் பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மிச்செல் ஒபாமா நியமிக்கப்படுவார் என்று அமெரிக்க செனட்டர் டெட் குரூஸ் (ஆர்-டெக்சாஸ்) கணித்துள்ளார். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டில் பைடன் மாற்றப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார். பைடனின் செயல்பாடு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டதை அடுத்தும், நேருக்குநேர் நடைபெற்ற விவாதத்திற்கும் பிறகும் இந்த கணிப்பு வந்துள்ளது. ஆயினும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேருக்குநேர் நடைபெற்ற விவாதத்தில் வெற்றி பெற்றவர் யார்? என அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் மெசேஜ் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 67 சதவிகிதம் பேர் ட்ரம்ப்க்கும் 33 சதவிகிதம் பேர் பைடனுக்கும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது, ஆளும்கட்சிக்கு மேலும் சரிவைத் தந்ததாலயே வேட்பாளரை மாற்றும் முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Exit mobile version