Site icon Tamil News

திருச்சி – ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் ரோட்டில் வீசப்பட்ட நடத்துநர்!

திருச்சியில், ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகர் நோக்கி இன்று மதியம் அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். நடத்துநராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. திருச்சி நகரப் பேருந்துகளில் நடத்துநருக்கு என்று தனி இருக்கை கிடையாது. பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துநர் முருகேசன் அமர்ந்திருந்தார்.

பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துநர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக சாலையில் வந்து விழுந்தது. இதில் இருக்கையில் அமர்ந்திருந்த நடத்துநர் முருகேசன் தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்ததில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கி வந்து காயமடைந்த நடத்துநர் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் உடைந்து ரோட்டில் விழுந்து கிடந்த இருக்கையை தூக்கி பேருந்தில் வைத்துக் கொண்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது.

அந்தப் பேருந்தில் வந்த பயணிகள் நடத்துநர் இல்லாததால் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரசுப் பேருந்துகளின் பரமாரிப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் வேறு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Exit mobile version