Site icon Tamil News

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆலங்குடி அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவிட்டு பின்னர் மண் அள்ளுமாறு கூறி திமுகவைச் சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் தனி நபராக அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள பெரியகுளம் 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளமாகும்.

இந்ந குளத்தில் கடந்த 15 நாட்களாக அரசு அனுமதியுடன் விவசாயப் பயன்பாட்டிற்காக மண் அள்ளி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 7 மணி அளவில் கொத்தமங்கலம் கிழக்குப் பகுதியில் கடந்த ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கொத்தமங்கலம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவரான திமுகவைச் சேர்ந்த முத்துத்துரை என்பவர் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

28 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளத்தை பலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றிய பிறகே எந்தப் பயன்பாட்டிற்காகவும் மண் அள்ள அனுமதிக்கக் கூடாது எனக் கூறி கழுத்தில் திமுக கட்சித் துண்டோடு சாலையில் கட்டிலைப் போட்டு அதிலு அமர்ந்தவாறு தனி நபராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு அரசுப் பேருந்து உட்பட வாகனங்கள் கொத்தமங்கலம் – கீரமங்கலம் சாலையில் காத்திருந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்ட முத்துத்துரையை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அகற்றினார்.

இதனையடுத்து பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.

இந்த சம்பவம் காலை நேரத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version