Site icon Tamil News

கோயிலுக்குச் சென்றபோது நடந்த சோகம்… மரத்தின் மீது கார் மோதியதில் 4 இளைஞர்கள் பலி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்தில் நான்கு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் விழாவிற்கு சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 5 இளைஞர்கள் காரில் குமாரபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தனசேகரன், லோகேஷ், சிவக்குமார் மற்றும் கவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஸ்ரீதர் என்ற இளைஞர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த குமாரபாளையம் பொலிஸார், சடலங்களை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிரிழந்த கவின் உடல் மட்டும் காரின் உட்பகுதியில் சிக்கியதால் உடலை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version