Tamil News

தமிழகம்- செல்போனுக்காக செங்கல் சூளை தொழிலாளி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் ; சிறுவன் உட்பட மூன்று பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(30), இவரது மனைவி செல்லம்மாள் இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ராஜேசின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் கடனை அடைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையயொட்டி உள்ள பகுதியில் ராஜேஷ் நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடம் இருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இந்த வழக்கை கொலை வழக்காக குன்றத்தூர் பொலிஸார் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வந்த நிலையில் தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த விஜய்(23), பொன்னேரியை சேர்ந்த திருமலை(19), மற்றும் 14 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மூன்று பேரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து செல்போன், பணம், மோட்டார் சைக்கிள் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களிடம் விசாரித்த போது செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கேட்டும் அவர் கொடுக்காததால் கத்தியால் அவரை வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.

தந்தையின் கடனை அடைக்க செங்கல் சூளையில் பணிபுரிய வந்த நபர் செல்போன் கொடுக்காததால் வழிப்பறி கும்பல் அவரை கொலை செய்த சம்பவத்தில் சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version