Site icon Tamil News

அரச உதவியால் நில அபகரிப்பு இடம்பெறுகிறது – சுமந்திரன் குற்றச்சாட்டு

அரச நிறுவனங்கள் அரச அதிகாரிகளின் அனுசரணையில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பணிமனையில் மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன் தலைமையில் இடம் பெற்ற பல்வேறுபட்ட சந்திப்புக்கள் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்கு தெரியப்படுத்தி இருக்கின்றார்கள்.

இதில் பிரதானமான பிரச்சினையாக நில அபகரிப்பு தொடர்பிலேயே பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை மூதூர் கங்குவேலி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய விவசாய செய்கையை குழப்பும் நோக்கில் குளத்தில் காணப்பட்ட நீரை வெளியேற்றி குளத்துக்குள்ளேயே வேற்று இனத்தவர்கள் வருகை தந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டிருந்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை.

நீர்ப்பாசன அதிகாரிகளிடம் முறையிடுமாறு பொலிஸார் கூறுவதாகவும் அவர்களிடத்தில் முறையிட்டும் எதுவித நடவடிக்கையை எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நீண்ட நாட்களாக திருகோணமலை மாவட்டத்தை ஒரு பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம் இப்பொழுது துரித கதியில் அமுல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

விஷேடமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 23 இடங்களில் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. பௌத்த மக்கள் வாழாத இடத்தில் கூட புத்தர் சிலைகளை நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு ஆளுநர் தடை விதித்தாலும் கூட பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் கற்று நிர்மான வேலைகள் இடம் பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Exit mobile version