Site icon Tamil News

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள மில்லியன் கணக்கான கடன்?

எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் செயற்குழு கூட்டத்தில் இலங்கைக்கான வரவு-செலவுத்திட்டம் மற்றும் நலன்புரி உதவிகளுக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுமதிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கையானது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டு வரும் என இலங்கை நம்புகின்ற நிலையில் இந்த உதவி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உத்தேச உலக வங்கி நிதியில், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்திற்கு தலா 250 மில்லியன் டொலர்கள் வீதம் இரண்டு தவணைகளாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தகவலை இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் முதல் தவணை உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version