Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : விதிமுறையை மீறினால் குடியுரிமை பறிக்கப்படும் என எச்சரிக்கை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்தால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்றும் வேட்பாளரின் குடியுரிமையும் பறிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2023 ஆம் ஆண்டு வர்த்தமானி இலக்கம் 03 ஊடாக இது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 1947 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் 31 நாட்களுக்குள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அதனை வழங்காமை மற்றும் தவறான தகவல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பதவி மற்றும் குடியுரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு புதிய சட்டத்தின் மூலம் இது சட்டமாகிவிட்டதால், தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆணையம் வழங்கும் செலவுகள் குறித்த விவரங்கள் நாளிதழ் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி, செலவின விவரங்கள் முரண்பாடாகவோ அல்லது தவறான தகவல்களாகவோ இருந்தால், எந்நேரத்திலும் அதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் நடவடிக்கை எடுக்க சட்டத்தின் மூலம் மக்களுக்கு அனுமதியுள்ளதாக திரு.ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

Exit mobile version