Site icon Tamil News

அமெரிக்க செனட் சபையின் அறிவித்தல், சர்வதேசத்தின் இலங்கை குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது – ஹர்ஷ டி சில்வா!

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனக் கூறும் அரசாங்கம் எதற்காக தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியத்தையும் தேர்தலையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்காவே பெரும்பான்மை வகிக்கின்றது. இந்நிலையிலேயே அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில் அவதானம் செலுத்தும் போது இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது எனக் கூறினார்.

Exit mobile version