தென் கொரியா நூறாண்டில் காணாத வெப்பத்தை எதிர்கொண்டுள்ளதுடன் தொடர்ந்து 26 நாளாக நாடு வெப்பமண்டல இரவைச் சந்திக்கிறது.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு வெப்பநிலை 25 பாகை செல்சியஸுக்கு மேல் சுட்டெரிக்கிறது. இன்னும் குறைந்தது 10 நாளுக்கு அந்த நிலை தொடரும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களில் வெப்பம் காரணமாகத் தென் கொரியாவில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வெப்பத்தைச் சமாளிக்க மக்கள் குளிர்சாதனத்தை நாடுவதால் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.
20 ஆண்டில் தென் கொரியாவில் தாங்க முடியாத வெப்பத்தின் அளவு இரண்டு மடங்காகிவிட்டது.
எப்போதும் சொல்லும் பருவநிலை மாற்றத்தை விஞ்ஞானிகள் இப்போதும் காரணமாகச் சொல்கின்றனர்.