பாலஸ்தீனத்தின் பிரதமராக முகமது இப்ராஹிம் ஷ்டய்யே இருந்து வந்தார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தனது பொருளாதார ஆலோசகரான முகமது முஸ்தபாவை அந்நாட்டின் பிரதமராக நியமித்துள்ளார். இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் பாலஸ்தீன அதிகாரிகத்திற்கு உட்பட பகுதியில் புதிய அரசை உருவாக்குவதில் இவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்.
முகமது முஸ்தபா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பாலஸ்தீன விடுதலை அமைப்பின் சுதந்திர செயற்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
பொருளாதார விவகாரத்திற்கான துணை பிரதமராக பணியாற்றியுள்ளார். பாலஸ்தீன முதலீடு நிதி குழுவில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
குவைத் அரசுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இறையாண்மை சொத்து நிதி, பொது முதலீட்டு நிதி ஆகியற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். 2014 ஆண்டு இஸ்ரேல் போர் தொடுத்த பிறகு, காசாவின் மறுசீரமைப்பு பணியில் ஈடுபட்டவர்.