Tamil News

இன்று ஆரம்பமான ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பயணம்

இலங்கையில் யாத்திரை செல்லுத் திருத்தலங்களில் ஒன்றாகவும் கிழக்கில் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பல்லாயிரக்கணக்கான அடியார்களுடன் இன்று அதிகாலை ஆரம்பமானது.

வடக்கில் மடுமாதா திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயமும் பக்தர்கள் யாத்திரை செல்லும் திருத்தலங்களாகயிருந்துவருகின்றது.

ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் நடாத்தப்பட்ட வழிபாடுகளை தொடர்ந்து பாத யாத்திரை ஆரம்பமானது.

இந்த பாதயாத்திரையானது வவுணதீவு ஊடாக ஆயித்தியமலையினை சென்றடையவுள்ளது.பாதயாத்திரையினை முன்னிட்டு இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டிருந்ததுடன் பாதயாத்திரை செல்வோருக்கான குடிநீர் மற்றும் குளிர்பான ஓழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நாளைய தினம் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா கூட்டுத்திருப்பலி ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையிலும் வத்திக்கான் பாப்பரசரின் இலங்கைகான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேயின் பங்குபற்றுதலுடனும் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Exit mobile version