Site icon Tamil News

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகள் தாக்கியதால் கைதி ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் இன்று சனிக்கிழமை (1) கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27ம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மொட்டையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளுடன் முரண்பட்டு அந்தக் குழுவினர் அவரைத் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Exit mobile version