Tamil News

3 இலட்சம் கேட்ட நடிகை.. மேடையில் வைத்து வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…

ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில்,

“படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சிறுவன் உட்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகை அபர்ணதியும் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் அவர் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை. படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகையை தயாரிப்பாளர் அழைத்துள்ளார். ஆனால் நடிகை அபர்ணதி எனக்கு புரோமோஷனுக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுக்கனும். அப்போதுதான் வருவேன் எனக் கூறியுள்ளார்.

இது புதிதாக உள்ளது. இது குறித்து என்னிடம் கூறியதும், நான் உடனே அந்த நடிகையை தொடர்புகொண்டு பேசினேன். நீங்கள் படத்தின் புரோமோஷனில் கலந்து கொள்ள வேண்டும். சினிமா இன்றைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒருவர் ஒரு படத்தை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. நீங்கள் படத்தின் புரோமஷனுக்கு வரவேண்டும். நீங்கள் வரமாட்டேன் எனக்கூறுவது தவறு எனக் கூறினேன்.

அதற்கு நடிகை அபர்ணதி, இல்லை இல்லை நான் வரமுடியாது எனக் கூறியதுடன் இரண்டு மூன்று கண்டிஷன்கள் வைத்தார். அதையெல்லாம் கூறினால், மிகப்பெரிய விஷயமாக மாறிவிடும்.

குறிப்பாக நான் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தால் நான் அமரும் மேடையில் எனக்கு சமமானவர்கள்தான் அமர வேண்டும். எனது அருகில் இவர்கள்தான் அமரவேண்டும் எனக் கூறினார். எனக்கு இது கோபத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே, நீங்கள் ஒன்று செய்யுங்கள், நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கள், தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அது என்ன ஆனது எனத் தெரியவில்லை. நீங்கள் நடிகர் சங்கத்தில் புகார் கொடுங்கள் எனக் கூறினால், நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவே இல்லை எனக் கூறுகின்றார்.

இறுதியாக நீங்கள் புரோமோஷனுக்கு வருவீர்களா மாட்டீர்களா எனக் கேட்டேன். உடனே அவர்கள் முடியாது சார், ரூபாய் 3 லட்சம் கொடுத்தால் வருகின்றேன் எனக் கூறினார். உடனே நான், ரொம்ப நன்றி.. நீங்க போனை வைங்க.. உங்களுக்கு மூன்று லட்சம் கொடுப்பதற்கு படத்திற்கு வேறுமாதிரி பப்ளிசிட்டி செய்துகொள்வோம் எனக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் நடிகையே எனக்கு போன் செய்தார். அப்போது, “ சாரி சார் நீங்கள் யார் எனத் தெரியாமல் பேசிவிட்டேன். நான் புரோமோஷனுக்கு வருகின்றேன் சார் எனக் கூறினார்.

என்னிடம் சாரி கூறி என்ன ஆகப்போகின்றது. படத்தின் புரோமோசனுக்காக வந்தால் படத்திற்கும் தயாரிப்பாளருக்கும் நல்லது என்றேன். இன்றைக்கு அவர் வரவில்லை. அவுட் ஆஃப் ஸ்டேசன் என தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார். அந்த நடிகை அவுட் ஆஃப் ஸ்டேசனிலேயே எப்போதும் இருக்கட்டும். இது போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை.

மற்ற தயாரிப்பாளர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் இதனைக் கூறுகின்றேன்” என பேசினார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Exit mobile version