Tamil News

முன்னாள் தலைவரால் வலுக்கட்டாயமாக மூடப்பட்ட மன்னார் செஞ்சிலுவை சங்க அலுவலகம்

மன்னார் மாவட்டத்தின் இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதான கிளை தலைமை பதவிக்கு தொடர்ச்சியாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் தலைவரினால் இன்றைய தினம் அலுவலகம் வலுக்கட்டாயமாக பூட்டு போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவராக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஜே.ஜே.கெனடி எனப்படுகின்ற நபர் தலைமை வகித்து வந்த நிலையில் இம் மாதம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிராக செயல் பட்டார் என்ற குற்ற சாட்டின் பெயரில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்காக விசாரணை நடவடிக்கை முடியும் வரை குறித்த தலைவர் பதவியில் இருந்து நீக்க பட்டிருந்தார்.

அதே நேரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்புரிமையில் இருந்து நிறுத்தப் பட்டிருந்தார்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட கிளையின் தீர்மானத்திற்கு அமைவாக வும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாப்பின் பிரகாரமும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட உப தலைவர் தற்காலிக தலைவராக பெயரிடப் பட்டிருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் தலைவர் குறித்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நான் தான் எப்போதும் தலைவராக செயற்படுவேன் என்றும் அது வரை எந்த செயற்பாடும் அலுவலகத்தில் இடம் பெற கூடாது என்ற அடிப்படையில் அடாவடித்தனமாக கதவுகளுக்கு பூட்டு போட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இதனால் அலுவலகத்திற்கு சேவைகாக வருகை தந்த ஊழியர்கள்,மற்றும் அங்கு சென்ற பொதுமக்கள் என எவரும் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவை சங்கம் தேசிய ரீதியில் பல்வேறு நல்ல செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் பெயர் சொல்ல கூடிய அளவு எந்த செயற் திட்டங்களையும் செய்யவில்லை என்பதுடன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கான அலுவலக கட்டட நிர்மாணம் கூட பல வருடங்களாக பூரணப் படுத்தப்படாத நிலை நீண்ட காலமாக காணப்படுவதாகவும் மன்னார் கிளையில் நடைபெற்ற ஊழல் நடவடிக்கை களே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரம் இல்லாமல் நீண்ட காலமாக குறித்த நபர் நிர்வாக தெரிவின் போது கிளை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காது நிர்வாக தெரிவுகள் மேற் கொள்வதாகவும் அதன் காரணமாகவே அவர் நீண்ட காலமாக தலைமை பதவியில் உள்ளார் எனவும் பல ஊழல் செயற்பாடுகளை தலைமை பதவியை கொண்டு மூடி மறைத்து உள்ளதாகவும் செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் .

Exit mobile version