Site icon Tamil News

சிறைக்கு சென்ற தந்தை, பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் இருந்து தாயை அழைத்து வந்த அமைச்சர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருநாகல் கீழ் கிரிபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய், தந்தையரின் கவனிப்பு இன்றி தனிமையில் வசித்து வந்த மூன்று பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலையிட்டு குழந்தைகளின் தாயை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது., அதன்படி இன்று காலை குறித்த பெண் நாடு திரும்பியுள்ளார்.

குவைத்தில் இருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த பெண் நாட்டுக்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் அவரை கிரிபாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தனக்கும் தனது மூன்று பிள்ளைகளுக்கும் வாழக்கூடிய வகையில் வீடு ஒன்றை அமைத்து தருமாறு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் குறித்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் தனது மூன்று குழந்தைகளையும் தனது தாயிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக குவைத் சென்றுள்ளார்.

பின்னர் அவரது தாய் சுகயீனம் காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குழந்தைகளும் தங்கள் கல்வியை நிறுத்திவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிள்ளைகளின் தந்தை சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version