Tamil News

திருகோணமலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபர் கைது

திருகோணமலை, தம்பலகாமம் அல்ஹிக்மா உயர்தரப் பாடசாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இரண்டு கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முகவர் ஒருவரிடமிருந்து போதைப்பொருள் வாங்கும் போர்வையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சில காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வருவதாக உண்மைகள் தெரியவந்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version