Tamil News

கர்நாடகா – 10ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக்கொலை செய்த வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

காதலை ஏற்க மறுத்த 10-ம் வகுப்பு மாணவியை கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த வாலிபர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அரசிகெரோ தாலுகா பெல்கும்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி(14, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெல்கும்பா அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்த சரத்(23) என்ற வாலிபர், சாந்தியை ஒருதலையாக காதலித்து வந்தார். பலமுறை சாந்தியிடம் தனது காதலை சரத் கூறியுள்ளார். ஆனால், தான் படிக்க வேண்டும் என்றும், காதலிக்க முடியாது என்றும் சாந்தி கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து சாந்தி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சரத் பின் தொடர்ந்து வந்துள்ளார். தோட்டத்தில் வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என்று சரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவரது காதலை, மாணவி சாந்தி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார்.

பாரிஸ் நகரில் கத்திக்குத்து : தமிழர் ஒருவர் பலி!! | வவுனியா நெற்

இதன் பின் அங்கிருந்து சென்ற சரத், அரசிகெரோ அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹாசன் மாவட்ட எஸ்.பி முகமது சுஜீதா சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். இதன் பின் கொலை செய்யப்பட்ட சாந்தி உடலையும், தற்கொலை செய்து கொண்ட சரத் உடலையும் பொலிஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த பத்தாம் வகுப்பு மாணவியை கொடூரமாக கொலை செய்து விட்டு வாலிபர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அரசிகெரோ பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version