Site icon Tamil News

காங்கேசன்துறை – நாகைப்பட்டினம் கப்பல் போக்குவரத்து – மீண்டும் ஏமாற்றம்

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவை நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகளினாலும் காலநிலை மாற்றத்தினாலும் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தினை இன்று ஆரம்பிக்க முடியவில்லையென கப்பல் சேவையை முன்னெடுக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து மூன்றாவது முறையாக இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுவதாக கூறப்பட்டது. பின்னர் 17 ஆம் திகதி முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.

எனினும், தொடரும் சீரற்ற வானிலையால் இன்று கப்பல் போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலே மீண்டும் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version