அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனத்தைப் பெற்றுள்ளார்.அதன் மூலம், முக்கியக் கட்சி ஒன்றின் நியமனத்தை வென்றிருக்கும் முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.முன்னாள் அதிபர் டோனல்ட் ட்ரம்ப்புக்கு எதிராக அவர் அதிகாரபூர்வமாகப் போட்டியிட ஆயத்தமாகிறார்.
ஹாரிஸ், 59, வாக்களித்த 4,567 பேராளர்களில் 99 சதவீத்த்தினரின்ஆதரவைப் பெற்றதாக ஜனநாயக தேசியக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.சட்டரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க, ஜனநாயக தேசிய மாநாட்டில் நேரடியாக நடத்துவதற்குப் பதிலாக, வாக்குப்பதிவு மெய்நிகர் வழியாக ஐந்து நாள்கள் நடத்தப்பட்டது
ஹாரிசும், விரைவில் அறிவிக்கப்படவிருக்கும் துணை அதிபர் வேட்பாளரும் நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், மாநாட்டின் செயலாளர் ஜேசன் ரே வாக்குப்பதிவின் முடிவுகளை உறுதிப்படுத்தவேண்டும்.ஹாரிசின் தாயார் இந்தியாவிலிருந்து வந்த குடியேறி. அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.அதிபர் பதவியைப் பெறக்கூடிய தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்ணும், முதல் கறுப்பினப் பெண்ணாகவும் அவர் இருப்பார்.
அதிபர் ஜோ பைடன் அதிபர் போட்டியிலிருந்து ஜூலை 21ஆம் திகதி விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முன்னணி நிலைக்குச் சென்றார் திருவாட்டி ஹாரிஸ்.அப்போதிலிருந்து, ஜனநாயகக் கட்சி அதன் புதிய வேட்பாளருக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது.
ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளருக்கான தேடல் பணியை விரைவில் தொடங்கி, அவரது இயக்கத்திற்குப் புதிய ஆலோசகர்களைக் கொண்டுவந்தார்.இதனிடையே, மெய்நிகர் வழியாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் திகதி காலை தொடங்கியது. ஆகஸ்ட் 2ஆம் திகதி பிற்பகலுக்குள், திருவாட்டி ஹாரிஸ், நியமனத்திற்குத் தேவையான பேராளர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுவிட்டார்.
வாக்குப்பதிவு ஆகஸ்ட் 5ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது.ஜனநாயக் கட்சி, முடிவுகளை நள்ளிரவுக்குச் சற்று முன்னர் அறிவித்தது.