Tamil News

யாழ்.இளைஞன் படுகொலை: சந்தேகநபர்கள் நால்வர் கிளிநொச்சியில் கைது

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நான்கு சந்தேகநபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் எனும் இளைஞன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து , கணவன் மனைவி இருவரும் இருவேறு வாகனங்களில் வன்முறை கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டனர்.

பின்னர் மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு , கணவன் மீது தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி படுகாயங்களை ஏற்படுத்திய பின்னர் வட்டுக்கோட்டை வைத்தியசாலை முன்பாக வீசி சென்று இருந்தனர்.படுகாயங்களுடன் காணப்பட்ட இளைஞனை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

Times Online - Daily Online Edition of The Sunday Times Sri Lanka

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் குழுவினர் , சந்தேக நபர்கள் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து , அங்கு விரைந்த பொலிஸ் குழுவினர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளை கைப்பற்றி உள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளை சேர்ந்த 37 , 32 , 25 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் உயிரிழந்தவரின் சகோதரன் ஒருவர் சாமியை தூக்குவதற்கு முற்பட்ட வேளை , ஆலய இளைஞர்கள் சிலர் அவரை தடுத்து முரண்பட்டுள்ளனர். அதனால் ஆத்திரமுற்ற இளைஞன் , தனது சகோதரனுடன் முரண்பட்ட இளைஞர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர்.இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் வகையிலையே தம்மை தாக்கிய இளைஞன் , தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்களின் வழிநடத்தலில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version