Site icon Tamil News

இந்தியா- 2500 பயணிகளை தவிக்க விட்டு நடுவழியில் இறங்கி சென்ற ரயில் ஓட்டுநர்கள் !

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் இரண்டு விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், 2500 பயணிகள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஹர்சா-படெல்லி இடையே புதன்கிழமை அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல் பரோனி-லக்னோ இடையே சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட்டது. சாத் பூஜையை முன்னிட்டு இந்த இரண்டு சிறப்பு ரயில்களையும் வடகிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது. இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்தனர்.

புர்வால் சந்திப்பு அருகே வந்தபோது, மதியம் 1:15 மணியளவில் சஹர்சா ரயிலின் ஓட்டுநர் பணி முடிந்து விட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து மாலை 4 மணியளவில் புர்வால் சந்திப்பிற்கு வந்த பரோனி ரயில் ஓட்டுநரும் பணி முடிந்து விட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்கி சென்றுள்ளார். இந்த ரயில் ஏற்கெனவே சுமார் 5:30 மணி நேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்துள்ளது.

சஹர்சா ரயிலின் மொத்த பயண நேரம் 25 மணி நேரம் என்ற நிலையில், சுமார் மூன்றாவது நாளாக பயணிகள், ரயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயிலில் குடிநீர், உணவு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறப்பு ரயில் என்பதால் அதிக கட்டணம் செலுத்தி இந்த ரயிலில் பயணித்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், கோண்டா சந்திப்பிலிருந்து பணியாளர்களை அனுப்பி, ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இரு ரயிலின் ஓட்டுநர்களும், தூக்க கலக்கத்தில் இருந்ததால், பணியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த சம்பவம், ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version