Site icon Tamil News

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள்

இலங்கையில் சீன அரசின் உதவியுடன் குறைந்த வருமானம் பெறுபவர்கள், வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது.

படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 1,996 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், சீன அரசாங்கத்தின் சார்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஷென்ஹோங்வும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

மூன்றாண்டுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடுகளில் 1,888 வீடுகள் கொழும்பில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும், 108 வீடுகள் உள்நாட்டின் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.

இதன்படி, பேலியகொடை பகுதியில் 615 வீடுகளும், தெமட்டகொட பகுதியில் 586 வீடுகளும், மொரட்டுவ பகுதியில் 575 வீடுகளும், மஹரகம பகுதியில் 112 வீடுகளும், கொட்டாவ பகுதியில் 108 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவற்றில் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள 108 வீடுகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்திற்காக சீன அரசாங்கம் 24.48 பில்லியன் ரூபாய் நிதியுதவி அளிக்கிறது.

இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version