Tamil News

16 மாதங்களுக்கு பின்பு பொதுவெளியில் தோன்றிய கோத்தபய ராஜபக்ச!!

நாடுதிரும்பி சுமார் 16 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று தான் முதன்முதலில் பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பெரும் கொந்தளிப்புக்குள்ளான மக்கள், இந்த நெருக்கடிக்கு கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் தீவிரமடைந்த நிலையில் அப்போது ஜனாதிபதியா இருந்த கோத்தபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவை பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை தலைக்குமேல் போனதையடுத்து ஜூலை 13ம் திகதி கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பியோடினார். இலங்கையிலிருந்து மாலத்தீவு சென்ற கோத்தபய பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார்.

அதன்பின் சுமார் 2 மாதங்கள் கழித்து கோத்தபய 2022 செப்.3ம் திகதியன்று இலங்கை திரும்பினார். கொழும்பில் விஜிர்மா மாவதா பங்களாவில் குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாளிகையை விட்டு அவர் வெளியில் வருவதே இல்லை.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் ஆண்டு விழாவிலும்கூட அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அவர் பொதுவெளிக்கு வந்துள்ளார்.

2024ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் ஆசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் அவரும் அவரது குடும்பத்தினரும் கொழும்பிலுள்ள கங்காராமய விகாரைக்கு சென்றனர். அவரும் அவரது குடும்பத்தினரும் விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரினிதே அஸ்ஸாஜி தேரரிடம் புத்தாண்டு ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

Exit mobile version