Tamil News

யாழ் பல்கலைக்கழக ஊடக ஆய்வு கூடத்திற்கு விஜயம் செய்த இந்திய துணைத் தூதுவர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்திற்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் விஜயம் செய்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளி வீதியில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வு கூடத்துக்குச் சென்ற இந்திய துணைத் தூதுவர் ஊடகத் துறையின் மேம்பாடு குறித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் ஊடக ஆய்வு கூடத்தின் செயற்பாடுகளை விளக்கியதுடன், ஊடக ஆய்வு கூடத்தில் உள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பாக விபரித்தார்.

மாணவர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட இந்திய துணைத் தூதுவர் கற்கைகள் தொடர்பான மாணவர்களின் தயாரிப்புகளைப் பாராட்டியதுடன் மாணவர்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்கு இந்தியாவில் இருந்து திரைப்பட இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்ற வளவாளர்களையும் அழைப்பதற்கான முன்மொழிவை ஊடக கற்கைகள் துறை சமர்ப்பிக்குமானால் சாதகமாக பரீசிலிப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது இந்திய துணைத் தூதரக அதிகாரி ரா.நாகராஜன்,ஊடக கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான பூங்குழலி சிறீசங்கீர்த்தனன், சிரேஸ்ட விரிவுரையாளர் ஜூட் தினேஷ் கொடுதோர், விரிவுரையாளர் அனுதர்சி கபிலன் மற்றும் ஊடக ஆய்வுகூட ஊழியர்கள் ஊடகத்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதர் அதிகாரிகளுடன் ஊடக ஆய்வு கூடத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version