Site icon Tamil News

அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட பைடன்

அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி பைடன் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால் கட்சிக்குளேயே எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாகவும், துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், போட்டியிலிருந்து விலகிய பிறகு நாட்டு மக்களுக்கு முதல்முறையாக புதன்கிழமை உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:

“இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கான நேரம் இது, அவர்களுக்கு வழிவிடுவதே சிறந்தது என்று நான் முடிவு செய்தேன். நமது தேசத்தை ஒன்றிணைக்க அதுவே சரியான வழியாகும்.

தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஜனநாயகத்தை காப்பதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியுள்ளேன். பதவியை நான் மதித்தாலும், அதைவிட நாட்டை நேசிக்கிறேன்.

ஜனாதிபதியாக அமெரிக்க மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன், ஆனால், ஜனநாயகத்தை பாதுகாப்பது பதவியைவிட முக்கியமானது.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும். நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடம் உள்ளது.

கமலா ஹாரிஸ் மிகவும் அனுபவம் கொண்டவர், திறமையானவர். துணை ஜனாதிபதியாக அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. தற்போது அமெரிக்காவை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தாண்டு நடைபெறும் தேர்தல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த பல ஆண்டுகள் அமெரிக்கா மற்றும் உலகின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல்.

நேர்மை, கண்ணியம், நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியற்றை அமெரிக்க மக்கள் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும். மீதமுள்ள 6 மாத காலம் எனது பணியை தொடர்வேன்” எனத் தெரிவித்தார்.

ஜோ பைடன் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ள நிலையில், கட்சியில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை ஜனநாயகக் கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், டிரம்பைவிட கமலா ஹாரிஸ் கருத்து கணிப்பில் முன்னிலையில் உள்ளார்.

Exit mobile version